மதமா? மனிதமா!
மனிதத்தை மதத்தினுள் புதைத்த
ஓ மனிதா..
விடியல் வேண்டி வினவுகிறேன்..
வாசிப்பாயா தமிழா?
தீபாவளிக்கு தின்பண்டங்கள்
பக்ரீத்துக்கு பிரியாணி
கிறிஸ்துமஸ்க்கு கேக்கு
பாசமாய் பகிர்ந்து, பகுத்துண்டு
சமத்துவமாய் சகோதரத்துவமாய்
வளமாய் வாழ்ந்தோமே..!
பெண்களை கண்களாய் தெய்வமாய்
இசைபாடி போற்றினோமே..
அத்தெய்வங்கள் வீதியில் வெகுண்டெழுந்து போராட
வசைபாடி தூற்றுவதேனோ சகோதரனே..?
எம்முன்னோர்கள் இந்திய அரசியலமைப்பை நம்பி
இங்கேயே குடியிருந்தது
எம் பிழையோ..?
இவ்வாண்டு காலம் இந்தியனாய்
வாழ்ந்து வரி கட்டியது
எம் தீவினையோ..?
குடியுரிமை கொடுக்க பெற மாட்டா
என் ஈழத்தமிழனை
ஈனப் பிறவி என்றெண்ணினாயோ..?
மதிப்பிழந்தது அறியாமல்
வேர்த்து சேர்த்த பணத்தை
முந்தியில் முடித்த மூதாட்டியை போல்..
கரையானுக்கு கூட கொடுக்க
பத்திரங்கள் பாத்திரங்கள் இல்லா
பாமரர்கள் பாவமன்றோ..?
பொருளாதாரம் நலிந்து
பணமதிப்பு சரிந்து
வேளாண்மை மெலிந்து
வேலைவாய்ப்பு குறைந்து
கல்வியறிவு குலைந்து
தெருக்கோடியில் நிற்கதியாய் நிற்பவரை
கோடிகள் கொட்டி நிர்பந்தமாய் நீர்த்திட நினைப்பதேனோ..?
வேற்றுமையிலும் இருந்த எங்கள்
ஒற்றுமையை வேரறுக்க வினைவதேனோ..?
கள்ளம் கபடமில்லா எம் நெஞ்சினுள்
நஞ்சை நயவஞ்சகமாய் விதைப்பதேனோ..?
கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்தோமே..
ஒற்றைத் தெருவில் ஒன்றாய் நடந்தோமே..
இன்று எம் கூக்குரலுக்கு கண்டும் காணாததாய் நடிப்பதேனோ..?
பல்லாயிரமாண்டு பழமை பெருமை கொண்ட என் தமிழினமே..
நம் வீரமெங்கே? அந்த ஈரமெங்கே?
நம் செறிவெங்கே? அந்தப் பரிவெங்கே?
உண்ணும் உணவை போல்
உடுத்தும் உடையை போல்
வணங்கும் கடவுளும் நம் விருப்பமன்றோ..?
நம் இணக்கத்தை பிணக்கிட
மாயக்கதைகள் உரைத்திட்ட
வஞ்சகரை சித்தனாய் எண்ணி
புத்திகெட்ட பித்தனாய் ஆவோமோ..?
நம்மை கொளுத்தி குளிர்காய்கிறர்..
தமிழனே! இந்தியனே!! மனிதனே!!!
விழித்துக்கொள்.. அணைத்துக்கொள்..
அனைவரையும் அன்பால் அரவணைத்துக்கொள்..!
அறம் நிலைக்கட்டும்..!
ஒற்றுமை ஓங்கட்டும்..!!
என்றும் ஒன்றாய் நின்றால் வென்றோம்..!!!
Discussion about this post