துயிலெழுந்ததும் ஓர் துக்கச்செய்தி;
அதிகாலையில் நண்பனின் அகால மரணம்..
அதிர்ச்சியும் அழுகையும் ஆட்கொள்ள
ஆறுமாதம் முந்தைய அவருடனான
உரையாடலை அசைபோடும் நினைவுகள்..
அதன்பின் பேசவில்லையே என்ற குற்ற உணர்ச்சியின் குமுறல்கள்..
அழைக்கவும் முடியாத அழிக்கவும் விரும்பாத
மற்றுமொரு எண்ணாய் மாறிப்போன சோகம்..
அதேசமயம் மரணத்தைப் பற்றியோர்
சிந்தனை சிந்தையை சிதைத்தது..
என் முடிவு எக்கணமோ? எங்கணமோ?
மறுமை நாளோ? மறுபிறவியோ?
மன்னிக்கப் படுவேனோ? தண்டிக்கப் பெறுவேனோ?
கவலைக்கன் ஞானக்கண் திறந்தது..
இதுவரை வாழ்ந்ததன் வினையென்ன?
வினவுகிறேன்..
இனி வாழ்வின் விதியென்ன? வியக்கிறேன், வியர்க்கிறேன்..
இன்று என்னுயிர் உடல் பிரிந்தால்
நாளை என் பிள்ளைகளின் நிலை
என்னவாகும் என்றெண்ணுகையில்
சட்டென்று தோன்றுகிறது
அனாதைக் குழந்தைகளின் மீது
அனுதாபம்..
வாழ்க்கை ஓடத்தின் நிதர்சனம் நிறுவியது
வாழ்க்கைக்கான ஓட்டத்தில் ஓர் நிதானம்..
சிந்தித்தேன் எதிர்நோக்கும் கணங்களை..
நிந்தித்தேன் எதிர்மறை எண்ணங்களை..
ஆரோக்கியத்தின் மீது அக்கறை கொள்ள,
சீர்கெடுக்கும் சோம்பலை கொல்ல,
வாழ்வின் லட்சியங்களை வெல்ல,
முடிவெடுத்தேன் மாற மெல்ல..
உள்ளுக்குள் புத்துணர்ச்சி ஊரெடுக்க
புதுமனுஷியாய் பூரித்தேன்..
உற்சாகமாய் வேலையை தொடங்க
அலுவலக அஞ்சல்கள் அடுக்கிக் கிடக்க
மாற்றத்திற்கான நாள் நாளை என்று
என்னை நானே ஏய்த்துக்கொண்டேன்..
மறைந்த நண்பனின் முகம் மீண்டும் தோன்ற
காற்றிலுள்ள மாய பிம்பத்தை கையசைத்து கலைத்து
கணினி உலகில் தொலைந்தேன்..
மற்றுமோர் நாள் முடிந்தது
எந்த மாற்றமும் இல்லாமல்..!
Discussion about this post