பிறர் எண்ணங்களைத் தன் எழுத்துக்களால் இயக்கும் மாயம்..
விண்ணுலகையும் தன் வரிகளால்
விழிக்குள் வரவைக்கும் வியூகம்..
சொற்பனத்திலும் கண்டிரா காட்சிகளை
சொற்ப சொற்களில் சொல்லும் திறன்..
தன் கற்பனைகளையும் புத்தகங்களாய்
விற்பனை செய்யும் யுக்தி..
இவையாவும் எழுத்தாளர்களின் சக்தி..!
உலகெங்கும் பல தாய்மொழிகள்..
பெற்ற பிள்ளைகள் பல இருந்தும் புறக்கணிக்கப்பட்டு
புதைக்கப்பட்ட பொக்கிஷமாய்
உள்ளுக்குள் புழுங்கி அழ
தாயையே தாலாட்டி சீராட்டி பாராட்டி
போற்றுபவர் படைப்பாளர் ஒருவரே..!
தொன்மைத் தமிழின் மாட்சி
அகிலமெங்கும் அதனின் ஆட்சி
எழுத்தாளர்களின் படைப்புகளே அதற்கு சாட்சி..!
கதைகளும் கவிதைகளும்
மூளைக்குள் கருகொள்ள
சிந்தையில் உயிர் கொடுத்து
உரைநடையில் உடல் கொடுத்து
கர்ப்ப காலமாய் கற்பனையில் வளர்த்து
ஒவ்வோர் படைப்பும் வெளிவரும் பரவசம், ஒரு பிரசவ சுகம்..
உங்களின் ஒரு பாராட்டு அக்குழந்தைக்குத் தாலாட்டு..!
ஒரு வாசிப்புக்காக, அந்த நேசிப்புக்காக
தன் எழுத்துக்களின் இடையே
தவம் கிடக்கும் என்னைப் போன்ற
ஆயிரமாயிரம் எழுத்தாளர்களுக்கு
வாழ்த்துக்களுடன் என் சமர்ப்பணம்..!
Discussion about this post